சாலையில் முள்வேலி அமைத்த 7 பேர் மீது வழக்கு
சாலையில் முள்வேலி அமைத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே குப்பாயூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் சாலையை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்தனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வடமதுரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குப்பாயூரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 40), ஆண்டிச்சாமி, வெள்ளைச்சாமி, கண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.