அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Update: 2023-06-28 01:07 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியை சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரம் மற்றும் கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த மின்சாரம், கலால் துறைகள் மற்ற 2 அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அவரை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்