சிமெண்டு விற்பனை முகவராக சேர்ப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி: திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

சிமெண்டு விற்பனை முகவராக சேர்ப்பதாக கூறி போடி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-03 18:45 GMT

போடி அருகே உள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 59). இவர், போடி நகர் தேவாரம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், "நானும், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த வேல்மணி என்பவரும் திருச்சியில் ஒரு தனியார் நிறுவன முகவர்களாக வேலை பார்த்தோம். கடந்த 2017-ம் ஆண்டு வேல்மணி, போடியில் உள்ள எனது நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அவருடன் திருச்சியை சேர்ந்த அசோக் சரவணன் என்பவரும் வந்தார். அவர்கள் இருவரும் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்டு நிறுவனத்தின் மதுரை பகுதிக்கான விற்பனை முகவராக இருக்குமாறு என்னைக் கேட்டனர். அதற்கு ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்றனர்.

அதை நம்பி நான் ரூ.10 லட்சம் கொடுத்தேன். ஆனால், முகவராக சேர்க்காமல் ஏமாற்றினர். பணத்தை திருப்பிக் கேட்டபோது குஜராத்தில் உள்ள ஒரு வங்கியின் பெயரில் 5 காசோலைகள் கொடுத்தனர். ஆனால், அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பியது. என்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட குற்றப்பிரிவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், வேல்மணி, அசோக் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்