சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினார்

Update: 2023-04-11 19:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

குறைத்திர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை பதிவு, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான வங்கிக்கடன் மற்றும் வீடு கட்டுவதற்கு கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி மொத்தம் 222 மனுக்கள் வரப்பெற்றன.

நலத்திட்ட உதவிகள்

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மனு அளித்தவுடன் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,600 மதிப்பிலான காதொலி கருவி மற்றும் சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 லட்சத்தில் இலவச தையல் எந்திரங்களையும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.19 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்திய சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் காந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து. கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்