பாதிக்கப்படும் 50 வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆலோசனை கூட்டம்

4 வழி சாலை விரிவாக்க பணியால் பாதிக்கப்படும் 50 வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update:2023-07-22 23:17 IST

தண்டராம்பட்டு

4 வழி சாலை விரிவாக்க பணியால் பாதிக்கப்படும் 50 வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

வீடுகள் இடிப்பு

திருவண்ணாமலை அருகிலுள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் இருந்து அரூர் வரை முதல்-அமைச்சரின் சாலை விரிவாக்கம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

கொளமஞ்சனூர் வழியாக நான்கு வழி சாலை செல்வதால் அந்த ஊராட்சியில் சாலையோரம் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை துறை மூலம் வீடுகளை இடிப்பதற்கு உண்டான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்துல் ரகூப் தலைமையில் பாதிக்கப்படும் வீட்டு உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

மாற்று இடம்

கூட்டத்தில் வீட்டின் உரிமையாளர்கள் மாற்று இடமாக எங்களுக்கு ஊரை ஒட்டியபடி அரசுக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்கி அந்த இடத்தில் வீடு கட்டிய பின்னர் சாலை போடுவதற்கு வீடுகளை இடிக்க வேண்டும். அதுவரை எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு தாசில்தார் அதிகம் பாதிப்பு ஏற்பட கூடிய வீட்டின் உரிமையாளர்களுக்கு முதலில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அந்த இடத்தில் நீங்கள் விடுகட்டிக் கொள்ளுங்கள் அதன்பிறகு படிப்படியாக அனைவரும் அதே பகுதியில் உள்ள அரசு இடங்களை அளவு செய்து வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார்.

ஆய்வு

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் தியாகு, வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ஆர். ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் அரசுக்கு சொந்தமான இடங்கள் எவ்வளவு உள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்