தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் 8,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடியில் தொகுப்பூதிய செவிலியர் ஒருவர் கூறினார்.;

Update:2025-12-21 02:17 IST

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.

ஆனால் நான்க‌ரை ஆண்டு காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. செவிலிய பணியாளர்களை நிரந்தரம் ஆக்கவில்லை என்றும், காலி பணியிடங்கள் நிரப்பாததை அடுத்து கடந்த 3 தினங்களாக தமிழகம் முழுவதும் தொகுப்பூதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளே தொகுப்பூதிய செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3-வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தொகுப்பூதிய செவிலியர்கள் கூறுகையில், "10 ஆண்டுகளாக நாங்கள் தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார். காலி பணியிடங்களை நீங்கள் கூறவில்லை. அரசு மருத்துவமனையில் கட்டிடங்கள் தான் உயர்கிறது. எங்களுடைய வாழ்வாதாரம் உயரவில்லை. செவிலியர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 2023-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தமிழகத்தில் 18 ஆயிரம் செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதி 356-ல், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் இன்று வரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கொரோனா காலகட்டத்தில் எங்களது பணியை முதல்-அமைச்சர் பாராட்டினார். ஆனால் நாங்கள் தற்போது தெருவில் வந்து போராடுகிறோம். தமிழக முதல்-அமைச்சர் கண்டு கொள்ளவில்லை. தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

சுகாதாரத் துறை அமைச்சர் போராட்டம் எங்கும் நடைபெறவில்லை என்று கூறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் தொகுப்பூதிய செவிலியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள் என்று கூறினார். நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் 8,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடியில் தொகுப்பூதிய செவிலியர் ஒருவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்