அனைத்து துறைகளிலும் ஊழல்; தமிழகத்தில் 4 முதல்-அமைச்சர்கள் உள்ளனர் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அனைத்து துறைகளிலும் ஊழல்; தமிழகத்தில் 4 முதல் அமைச்சர்கள் உள்ளனர் என மின் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-09-16 06:08 GMT

சென்னை

2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை.இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது.

15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு துளியளவு கூட நன்மையில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் 4 முதல் அமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் குடும்பம் தான் அதிகார மையமாக திகழ்கிறது.

மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகவே உள்ளார். திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மக்களின் பிரச்னைகளில் தி.மு.க. கவனம் செலுத்தவில்லை.

தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு. திராவிட மாடல் என கூறி மாக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.

ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தியவர்கள் இன்று இரண்டாயிரம் சொத்து வரி செலுத்துகின்றனர். கூரை வீட்டுக்கு வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசு தி.மு.க. அரசு 500 யூனிட் பயன்படுத்துவோம் 55 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதி சுமையை ஏழை, எளிய மக்கள் தலையில் சுமத்தி ஸ்டாலின் துன்புறுத்துகிறார்.

வசூல் மன்னராக இருக்கிறார் நமது முதல்-அமைச்சர் ஸ்டாலின்; தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல்.இவ்வாறு பழனிசாமி பேசினார்

Tags:    

மேலும் செய்திகள்