பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்: கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாக கர்ப்பிணி மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-20 10:06 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). இந்த தம்பதிக்கு ஒராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கணவன், மனைவி ஓசூர் பேகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் அவரது தாயும் உதவிக்காக அவர்களுடன் தங்கி இருந்தார்.

இதனிடையே, விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் அதிக பணம் முதலீடு செய்துள்ளார். அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்கு சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடன் அதிகரிக்கவே அதனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜயகுமாரும் அவரது மனைவி சந்தியாவும் அறைக்கு தூங்க சென்றனர். ஆனால், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாயார் கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமாரும் சந்தியாவும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் விஜயகுமார் அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கடன் தொல்லைக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்துவிட்டேன் என்று எழுதி வைத்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் கர்ப்பிணி மனைவியுடன், வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்