கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

கம்பைநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-09-23 18:45 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் கோட்டை வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மகன் ருத்தேஷ் (வயது 9). இவன் இருமத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் பையை வீட்டில் வைத்து விட்டு விளையாட சென்றான்.

ஆனால் மாலை 6 மணி ஆகியும் மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதேபகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் மாணவனின் சீருடை இருந்தது. இதனால் அவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என அவர்கள் கருதி கதறி அழுதனர். இதையடுத்து பொதுமக்கள் கிணற்றுக்கு வந்தனர்.

உடல் மீட்பு

இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி மாணவனை தேடினர். அப்போது மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்