பர்கூர் அருகேகுழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

Update: 2023-04-07 19:00 GMT

பர்கூர்:

பர்கூர் ஒப்பந்தவாடி ஊராட்சி கனமூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்- புவனேஸ்வரி தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (வயது 22). இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா மல்லானூர் அருகே சாதுமூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யா தனது தாய் வீட்டிற்கு வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் அங்கிருந்து பிரசவத்திற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரத்த அழுத்தம் அதிகமாக மயங்கி விழுந்த ஐஸ்வர்யாவை உறவினர்கள் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஐஸ்வர்யா திடீரென இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்