லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்து உள்ளார்.;

Update:2023-02-21 00:15 IST

ஆன்லைன் அபராதம்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் லாரித்தொழிலில் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் போலீசார் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் லாரிகளுக்கு தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதித்தது லாரி உரிமையாளர்களுக்கு செல்போன் எண்ணில் குறுஞ்செய்தி வந்தபிறகுதான் தெரிகிறது. பின்னர் இது தொடர்பாக யாரிடமும் விளக்கம் கேட்க முடியவில்லை.

ஆர்ப்பாட்டம்

லாரிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும்போது போலீசார் லாரிகளை தடுத்து நிறுத்தி, குற்ற நோட்டீஸ் வழங்கி, டிரைவரிடம் கையொப்பம் பெற்று அபராதம் விதித்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. இதை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் மனு அளித்தோம்.

பின்னர் 30-ந் தேதி சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து இது குறித்து மனு அளித்தோம். அவர் எங்கள் பிரச்சினையை கேட்டு, மாவட்ட அளவில் உள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கி ஆன்லைன் அபராதத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 15 நாட்கள் மட்டுமே ஆன்லைன் அபராதம் விதிப்பது குறைந்தது.

கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஆன்லைன் அபராதம் விதிப்பது அதிகரித்து உள்ளது. எனவே இன்னும் 20 நாட்களில் ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். இல்லைஎனில் முறைப்படுத்தாவிட்டால் சென்னையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு லாரிகளை தகுதிச்சான்று பெற கொண்டு சென்றால் குறிப்பிட்ட கம்பெனிகளின் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. சாதாரணமாக வெளி மார்க்கெட்டில் ரூ.1,000-க்கு கிடைக்கும் இந்த ஸ்டிக்கர்களுக்கு, குறிப்பிட்ட கம்பெனியிடம் இருந்து வாங்கினால் ரூ.3,500 செலவாகிறது. இது குறித்து ஏற்கனவே பல முறை அதிகாரிகளை சந்தித்து பேசி அவர்கள் ஒப்புக்கொண்டாலும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று உள்ளோம். உடனடியாக இதை மாற்றாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடையுள்ள சரக்குகளை ஏற்றினால் தற்போது அதிக அளவில் அபராதம் விதிக்கின்றனர். எனவே லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேலும், கூடுதல் உயரம் மற்றும் அகலம் பாரம் ஏற்றுவதை லாரி உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்