முத்திரைக் கட்டணங்கள் உயர்வை திரும்ப பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு 3 ஆண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-05-12 09:05 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொம்மை முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தரப்போகிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் ஆட்சி ஒரு இருண்ட ஆட்சியாகவே இருக்கிறதென்று சொன்னால் அது மிகையாகாது. திரும்பிய துறைகளில் எல்லாம் நிர்வாகத் திறமையற்று மக்கள் தலையில் பேரிடியாய் வாய்த்திருக்கின்ற இந்த அரசு, தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, ஏற்கெனவே 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளிகள் ஆக்கியுள்ளது. அது போதாதென்று 150 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு என தனது நிர்வாகத் திறமையின்மையினால், மக்கள் தலையில் சுமைகளை ஏற்றியுள்ளது இந்த தி.மு.க. அரசு.

கடந்த 8.7.2023 அன்று, பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய தி.மு.க. அரசு, தற்போது தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 8.5.2024 அன்று தேதியிட்ட அரசு அறிவிக்கையின்படி, 3.5.2024 முதல் தத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தியுள்ளது நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு.

இருக்கின்ற நிதியை சரிவர மேலாண்மை செய்து, புதிதாக வாங்கும் கடன்களை மூலதனச் செலவுகளாகவும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்ல அரசின் இலக்கணம். அதன்படி செவ்வனே செயல்பட்ட ஜெயலலிதா அரசும், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசும் மக்கள் மீது சுமைகளை பெரிதும் ஏற்றாமல், பொருளாதாரத்தை உரிய குறியீடுகளுக்குள் சரிவர நிர்வகித்து வந்தது.

ஆனால், கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின், தலைமையிலான தி.மு.க. அரசு, அனைத்துத் துறைகளையும் முறைகேடுகளால் சீர்குலைத்து, மாநிலத்தின் நிதிநிலைமையை நிலைகுலையச் செய்து, தன் தவறுகளால் ஏற்படும் பாரத்தை, வரி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே, தி.மு.க. அரசு கொண்டுவந்த வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு கொடுத்த தீர்ப்பை இதுவரை இந்த தி.மு.க. அரசு அமல்படுத்தவில்லை. சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு இதுவரை தடையாணை தரவில்லை.

எனவே, எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்