ஈமு கோழி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4¼ கோடி மோசடி செய்த வழக்கில் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது;

Update:2022-05-27 18:56 IST

கோவை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4¼ கோடி மோசடி செய்த வழக்கில் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஈமு கோழி வளர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்கள் செந்தில் நாதன் (வயது 37), சிதம்பரம் (40). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் ஈமு பார்ம் நிறுவனம் தொடங்கினர்.

இதில் முதலீடு செய்ய 2 சலுகை திட்டங்களை அறிவித்தனர். முதலாவது திட்டத்தில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் வழங்குவதுடன் 3 ஆண்டுக ளில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும்.

ரூ.4¼ கோடி மோசடி

மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை, 24 மாதங்களில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை

இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் அவர்கள் 129 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 500 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

3 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. ஈமு பார்ம்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில் நாதன் வழக்கில் ஆஜராகாமல் தலைமறை வாகி விட்டார். எனவே அவர் மீதான குற்றச்சாட்டு பிரிக்கப்பட்டு தனி வழக்காக நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி குறித்த வழக்கை விசாரித்த டான்பிட் கோர்ட்டு நீதிபதி ரவி, ஈமு கோழி நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 கோடியே 6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அந்த அபராத தொகை ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்