காதல் திருமணம் செய்த என்ஜினீயர் தற்கொலை

சேலம் அருகே காதல் திருமணம் செய்த என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-13 22:11 GMT

என்ஜினீயர்

சேலம் அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத் (வயது 35). என்ஜினீயரான இவர் சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டரான அக்சிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அக்சிதா வேலூரில் தங்கியிருந்து மேல் படிப்பு படித்து வருகிறார். அவருடன் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஸ்ரீராம் பிரசாத் தாதம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் மாடியில் உள்ள தனது அறைக்கு தூங்குவதற்கு சென்றார்.

தற்கொலை

நேற்று காலை நீண்ட நேரமாகியும் மகன் எழுந்து வராததால் பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஸ்ரீராம் பிரசாத் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீராம் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவி மற்றும் பெற்றோர் இருவேறு இடங்களில் வசித்து வருவதால் ஸ்ரீராம் பிரசாத் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இருப்பினும் ஸ்ரீராம் பிரசாத் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்