தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.

Update: 2023-06-11 19:59 GMT

தொட்டியம்:

என்ஜினீயரிங் மாணவர்கள்

தர்மபுரிைய சேர்ந்த தண்டபாணியின் மகன் மதியழகன்(வயது 21). இவரும், இவரது நண்பரான தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்சாய் மகன் சிவப்பிரகாஷ்(21) என்பவரும் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் சிவில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் உள்ள மதியழகன் வீட்டிற்கு புறப்பட்டனர். தொட்டியத்தை அடுத்த திருஈங்கோய்மலை அருகே காவிரி பாலம் பகுதியில் சென்றபோது பால தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

சாவு

இதில் மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவப்பிரகாஷ் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்