நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கேக் வெட்டி கொண்டாடிய விவசாயிகள்
மூடப்படாமல் தொடர்ந்து இயங்கிய நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.;
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெளுக்கனந்தல் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையம் திறந்ததில் இருந்து மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
150 நாட்களுக்கும் மேல் இயங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதை கொண்டாடும் வகையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் வெளுக்கனந்தல் பரணி, ஒன்றிய துணை தலைவர்கள் கார்கோணம் சக்திவேல், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் கேக் மற்றும் இனிப்புகளை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.
மேலும் அவர்கள் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்குவதற்கு பணியாட்கள் அதிகப்படியான கூலி கேட்கின்றனர். எனவே கூலித்தொகை முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒரு தொகுதிக்கு ஒரு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும்.
அனைத்து கொள்முதல் நிலையங்களும் விவசாயிகளின் தேவைக்கேற்ப செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.