பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.1,000 விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2023-07-23 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.1,000 விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. சேலம் மாவட்டம் கருமந்துறை, திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்ததால் தற்போது டன் ரூ.1,000 வரை உயர்வடைந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வடைந்து ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்