பயிர் சேத விவர கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்

பாபநாசம் வட்டாரத்தில் பயிர் சேத விவர கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update:2023-02-08 01:06 IST

பாபநாசம் வட்டாரத்தில் பயிர் சேத விவர கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

நெற்பயிர்கள் சேதம்

பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறி பெய்த கன மழையினால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர் சேதங்களை நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழை நீர் வடிய வாய்ப்பில்லாமல் தேங்கியுள்ளது. மேலும் அதிக விளைச்சல் காரணமாக நெற்பயிர் சாய்ந்து விட்டதால், அறுவடை பணி மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வடிகால் வசதி இல்லாத இடங்களில் இவ்வாறு சாய்ந்த நெற்பயிர்கள் தற்போது முளைக்க தொடங்கி விட்டன. எனவே மேலும் தாமதிக்காமல் விவசாயிகள் அறுவடை பணிகளை முடித்திருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

விவசாயிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்கள். அதில் பயனடைய உண்மையிலேயே பாதிப்படைந்த விவசாயிகள் மட்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறை, வேளாண்மை துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் பயிர் சேத விவர கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது உமையாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் சுகுணா, கூனஞ்சேரி வேளாண்மை உதவி அலுவலர் நிவாசன், வேளாண்மை உதவி அலுவலர் திரிபுரசுந்தரி, அட்மா திட்ட மேலாளர் சிவரஞ்சனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்