கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க நிதி உதவி

மதுரை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

Update: 2023-05-11 20:05 GMT

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகளின்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை வழங்கப்படுகிறது. அதன்படி கட்டிடம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.2 லட்சமும், 15 முதல் 20ஆண்டு வரை உள்ள கட்டிடத்திற்கு ரூ.4 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் ரூ.6 லட்சம் வழங்கப்படும். எனது (கலெக்டர்) தலைமையிலான குழு பெறும் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இது தொடர்பான விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்