பென்னாகரம் அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாட முயன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ரோந்து பணி
பென்னாகரம் அருகே மசக்கல் காப்புக்காடு பகுதிகளில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மசக்கல் காப்புக்காடு மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அதே பகுதியை பழனிசாமி (வயது61) என்பதும், முயல் வேட்டையாட சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வலையை பறிமுதல் செய்தனர்.
அபராதம்
பின்னர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற பழனிசாமிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி செல்லும் நபர்கள் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.