தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-27 14:09 GMT

விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடு புகார்

குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர், மரிக்கந்தை, வல்லகுண்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்காமல் இழுபறி நீடிப்பதாகவும் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்த அலுவர் நியமித்து கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காத்திருப்பு போராட்டம்

இதன் காரணமாக நேற்று ஏராளமான விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட பணங்களுக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் புதிதாக பயிர் கடன் வாங்க முடியாத நிலை உள்ளதாகவும் விவசாயிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ரசிது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துகிருஷ்ணன், துணைப்பதிவாளர் கதிரவன், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும் என்றும் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்