மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
மத்திய அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
மத்திய அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இலவச பயிற்சி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிவகங்கை-திருப்பத்துார் ரோட்டில் கலெக்டர் அலுவலக முகப்பு (மயில்கேட்) அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது.
விண்ணப்பம்
தற்போது மத்திய அரசால் சுமார் 4,500 காலிப்பணியிடங்கள் தேர்விற்காக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 4-ந் தேதி ஆகும். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலைநாடுனர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களின் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்காணும் தேர்விற்கு விண்ணப்பம் செய்து தரப்படும்.
விண்ணப்பிக்கலாம்
மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்புபவர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.