2½ கிலோ தங்க கட்டிகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட படகில் 2½ கிலோ தங்க கட்டிகள் இருந்தது.

Update: 2023-06-07 18:45 GMT

பனைக்குளம்

இலங்கையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தங்க கட்டிகள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மண்டபத்திற்கும் வேதாளைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பைபர் படகில் வந்த கடத்தல்காரர்கள் படகை வேகமாக செலுத்தி உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்கரை ஒட்டிய பாறை மீது ஏற்றி நிறுத்தி விட்டு தப்பினர். பின் தொடர்ந்து வந்த சுங்கத்துறையினர் படகில் இருந்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதில் 5 கிலோ வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை ஏதேனும் கடலில் வீசி உள்ளனரா? என 2 நாட்களாக நொச்சியூரணி கடற்கரை மற்றும் கடல் பகுதியில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்றும் கடலில் தங்கக்கட்டிகளை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே படகில் இருந்து எடுக்கப்பட்ட தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சல்கள் நேற்று மாலை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து சுங்கத்துறை இணை ஆணையர் ராமச்சந்திரன் முன்னிலையில் பிரித்து ஆய்வு செய்து எடை போட்டு சரிபார்க்கப்பட்டது. அதில் 2½ கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இது பற்றி சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, படகிலிருந்து 2½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகிறோம். மேலும், தங்க கட்டிகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு ராமநாதபுரத்தை சேர்ந்தது இல்லை. தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க ஏற்கனவே தங்கக் கட்டிகள் தொடர்பான வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்