பட்டதாரி வாலிபர் மர்ம சாவு

நாமக்கல் அருகே மர்மமான முறையில் இறந்த பட்டதாரி வாலிபரின் உடலை சாலையோரம் உள்ள புல்வெளியில் இருந்து மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-10-26 01:00 IST

பட்டதாரி வாலிபர்

நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ஆகாஷ் (வயது 24). பி.ஏ. பட்டதாரியான இவர் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டிக்கு நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இரவு நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் செல்லப்பம்பட்டி பிரிவு சாலை அருகே சாலையோரத்தில் புல்வெளியில் தலை உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மசாவு

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆகாஷின் உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் ஆகாஷ் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கூறினர். அதை ஏற்க மறுத்த அவர்கள் ஆகாஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சந்தேக மரணம் (மர்மசாவு) என வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பட்டதாரி வாலிபர் ஆகாஷ் சாலை விபத்தில் மரணம் அடைந்தாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்