ஆஞ்சநேயர் கோவில்களில்அனுமன் ஜெயந்தி விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

அனுமன் ஜெயந்தி விழா

விழுப்புரம் திரு.வி.க. சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் குமார் செய்திருந்தார்.

1,008 வடை மாலை

இதேபோல் கோலியனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு 1,008 வடைகள் கோர்க்கப்பட்ட மாலை சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழுப்புரம் அருகே வாணியம்பாளையத்தில் உள்ள சஞ்சீவிராயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், ஹனுமத் ஹோமம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூலவர் சஞ்சீவிராயருக்கு சிறப்பு திருமஞ்சனமும், உற்சவர் சீதா சமேத ஸ்ரீராமர், லட்சுமணர் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும் நடந்தது.

பின்னர் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்