நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் திடீரென வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-09-19 18:45 GMT

பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த 3 நாட்களாக தொடர்விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நேற்று முன்தினம் கொடைக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மதியம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவியின் முன்புறம் உள்ள கதவுகள் அடைக்கப்பட்டன. அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்