வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை:மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்ததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.;

Update:2023-10-10 00:15 IST

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கும் மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மூலவைகை ஆற்றுக்கு வெள்ளிமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் அந்த பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூலவைகை ஆறு வறண்ட நிலையில் காணப்பட்டது.

இதன் காரணமாக உறை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. எனவே கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. மேலும் வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்பட்டதால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று மாலை நீர்வரத்து அதிகரித்து வருசநாடு கிராமத்தை கடந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் வருகிற நாட்களில் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து காரணமாக வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்