என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு இனி இரண்டு முறை யோசிப்பேன் - சாய் பல்லவி

சமீபத்தில் சாய் பல்லவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-06-19 07:31 GMT


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி சமீபத்தில் மத ரீதியாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைத்தளத்தில் கண்டனங்களும் கிளம்பின.

இந்த நிலையில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து சாய்பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், 'சில தினங்களுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதைத்தான் பேட்டியில் தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், ஜாதி, கலாச்சாரம், மொழி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது.

எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். எனது 14 வருட பள்ளி காலத்தில், தினமும் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நேசிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறேன்.

சாதி, மதம், இனம் ரீதியாக யாரையும் வேறுபடுத்தி பார்த்தது இல்லை. நடுநிலையாகவே பேசுவேன். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பலர் கருத்து கூறியது வேதனை அளிக்கிறது.

என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என நான் கவலைப்படுவதால், இனி என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பேன். வன்முறை எந்த வடிவத்திலும் தவறு ,எந்த மதத்தில் பெயரால் நடக்கும் வன்முறையும் பெரும் பாவம் என்றும் நம்புகிறேன். எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்