குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அரசு பஸ் சிறைபிடிப்பு
சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலிலும் மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலிலும் மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து '12 பி' என்ற அரசு பஸ் காமநாயக்கன்பாளையம், வதம்பச்சேரி, வடவேடம்பட்டி, குமாரபாளையம் வழியாக செல்லியகவுண்டன்புதூர் கிராமத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ், செஞ்சரிமலைக்கு சென்று மீண்டும் பல்லடம் நோக்கி செல்கிறது. இதில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குறித்த நேரத்துக்கு செல்லியகவுண்டன்புதூருக்கு பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8 மணியளவில் செல்லியகவுண்டன்புதூருக்கு வந்த பஸ்சை திடீரென சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கேட்டபோது, சாலை பழுதாகி கிடப்பதால் பஸ்சை இயக்குவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் பொதுமக்கள் கூறும்போது, தினமும் 6 முறை இயக்கப்பட வேண்டிய பஸ், கடந்த சில நாட்களாக 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து வழக்கம்போல் 6 முறை பஸ்சை இயக்க வேண்டும் என்றனர்.
இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு டிரைவர், கண்டக்டர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் தங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டர் மற்றும் ஒன்றிய நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.