திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

சென்னை கொடுங்கையூரில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்தார்.

Update: 2022-05-24 15:48 GMT

சென்னை கொடுங்கையூர், எழில்நகர், பி.பிளாக், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 25). இவர், திருமுடிவாக்கத்தில் கிரேன் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காவியா (19). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆகிறது. காவியாவுக்கு ஏற்கனவே 2 முறை கரு கலைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த காவியா, நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காவியா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தனது மகள் காவியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தையான ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா காவேரிபாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காவியாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்