திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட 3 இடங்களில்469 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட 3 இடங்களில் 469 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Update: 2023-08-01 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட 3 பள்ளி மாணவ, மாணவியர் 469 பேருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இலவச சைக்கிள்

தமிழக அரசின் சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 248 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசுகையில், மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காவே இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது, என்றார்.

பேட்டரி வாகனங்கள்

பின்னர், திருச்செந்தூர் நகராட்சியில் 15-வது நிதிநிலை மானியக்குழு சார்பில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்காக அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாக்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஷிபாஜெனி அமுதா, கங்கா கவுரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள், மாநில தி.மு.க.வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாசரேத்

நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி எஸ்.ஏ. தாமஸ் கலையரங்கில் 156 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று காலையில் நடைபெற்றது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் , மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, பள்ளி தலைமையாசிரியர் கென்னடி தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெயசீலன் சேகர் டேவிட் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், தூத்துக்குடி ஆவின் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ஜோசப் பள்ளி

திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முன்னிலை வகித்தார். அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் இயக்குனர் பிரொமில்டன் லோபோ வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் 65 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி வாழ்த்தி பேசினார். .

பின்னர் திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்தில் ரூ.28 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 6 புதிய மின் மாற்றிகளை அமைச்சர் இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திருச்செந்தூர் உதவி கலெக்டர், மண்டல துணை தாசில்தார் தங்கமாரி, அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மநாயகம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதிஷ் வி.ராயன், வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்து தலைவர் வசந்தி, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து, கட்டுமான மற்றும் மேம்பாட்டு பொறியாளர் ராம்மோகன், உதவி பொறியாளர்கள் முத்துராமன், ராஜா ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்