வீரபாண்டியில் இரு தரப்பினர் மோதல்; 6 பேர் கைது

வீரபாண்டியில் இரு தரப்பினர் மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-07 16:25 GMT

தேனி அருகே உள்ள வீரபாண்டி ஹைஸ்கூல் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது பண்ணை அருகில் மாரியப்பன் என்பவரும் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கோழிப்பண்ணை பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாரியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் வனத்தாய், அபி என்ற அபிமன்யு (வயது 23), ராமகிருஷ்ணன், ஜெகநாதன், சுபாஷ், டெண்டுல்குமார், நந்தகுமார், ரஞ்சித், மாரிச்சாமி ஆகிய 10 பேரும் சேர்ந்து நாகரத்தினம் மகன்கள் மனோஜ் குமார், பிரேம்குமார் ஆகிய 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் அபிமன்யு, ராமகிருஷ்ணன், ஜெகநாதன், மாரிசாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் அபிமன்யு கொடுத்த புகாரின் பேரில் மனோஜ் குமார், பிரேம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்