400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-09 18:45 GMT

சிவகங்கை அருகே 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

400 ஆண்டுகள் பழமை

சிவகங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் நகரம்பட்டியில் இடிந்து சிதலமடைந்துள்ள சிவன் கோவில் சுவரில் பழங்கால எழுத்துகள் இருப்பதாக சிவகங்கை தொல்நடை குழுவிற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், உறுப்பினர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து காளிராசா கூறுகையில், இங்கு 400 ஆண்டுகள் பழமையான கோவில், மறு கட்டமைப்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமையான கல்வெட்டில் மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி என வழங்கப்படுகிறது, மேலும் இப்பகுதியை மருதுபாண்டியர்கள் வாழ்ந்த 17-ம் நூற்றாண்டில் வாளுக்கு வேலி இப்பகுதியில் படைத்தளபதியாக வாழ்ந்த செய்தியை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. பாகனேரி நாட்டில் ஆறு முதன்மையான ஊரில் ஒன்றாகவும் நகரத்தார் வாழ்ந்த ஊராதலால் நகரம்பட்டி எனவும் இன்றைய நகரம்பட்டி வழங்கப்படுகிறது. நகரம்பட்டி ஊருக்கு வெளியே கதவங்குடி கண்மாய் பகுதியில் சிதலமடைந்த பழமையான சிவன் கோவில் உள்ளது. அதில் ஒரு பக்க சுவரில் நான்கு கற்களில் தொடர்ச்சியான கல்வெட்டு காணப்படுகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு எழுத்தமைதியை கொண்டு 15, 16-ம் நூற்றாண்டாக இருக்கலாம். கல்வெட்டு உள்ள கற்கள் ஆங்காங்கே இடிந்து எழுத்துகள் முழுவதுமாக தெரியவில்லை. அதில் தெரியும் சில எழுத்துகளில் கதவங்குடி வாக்கிய நல்லூர் நாயனார் அகத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் அதிட்டானாம், உபானம் கட்டுவதாக சொன்ன வண்ணஞ் செய்தார் என்ற சொற்கள் மூன்று முறை வருகிறது. ஓரிடத்தில் உடையார் சூரிய தேவர் சொன்ன வண்ணம் செய்தார் என வருவதால் உடையார் சூரிய தேவர் என்பவர் இப்பகுதியின் ஆட்சியாளராகவோ அல்லது அரசு அலுவலராகவோ இருந்திருக்கலாம்.

மேலும் இக்கோவில் நாயனார் அகத்தீஸ்வரமுடையார் என்றும் தேவி திருக்காம கோட்டத்து நாச்சியார் என்றும் அறிய முடிகிறது. வேங்கை, மாணிக்கவல்லி போன்ற கண்மாய் வயல் பகுதி கல்வெட்டுகளில் வருகிறது.

சிதைவுற்ற கோவில்

பழந்தேவர் என்னும் சொல்லால் இக்கோவிலில் பழம் கோவிலாக இருந்து மறு கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது. பெரிதும் சிதைவுற்ற நிலையில் உள்ள இக்கோவில் தற்போதும் மக்களால் வழிபாட்டில் உள்ளது என்று கூறினார்.

இவ்வூரைச் சேர்ந்த பேராசிரியர் முத்தையா மற்றும் இந்திய கப்பல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கக் கூடிய சுப்பிரமணிய பாரதி, பாலசுப்பிரமணி ஆகியோரிடம் கேட்டபோது பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்