குழந்தை திருமணம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

குழந்தை திருமணம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

Update: 2023-03-07 19:10 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ-மாணவிகளிடையே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும் போலீசார் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ-மாணவிகளிடையே போலீசார் பேசுகையில், நீங்கள் பயிலும் பள்ளியில் உங்களது தோழிக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ 18 வயது பூர்த்தியடையாமல், அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால் நீங்கள் தைரியமாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்