பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-29 19:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப்புத்தகங்கள் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். இந்த பணிகளை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

பணி தீவிரம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி, அரசு உயர்நிலை, அரசு மேல்நிலை, அரசு உதவி பெறும் மற்றும் ஆதிதிராவிட பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிகள் உள்ளன. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 35 ஆயிரத்து 440 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

எனவே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்புகள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வாகனங்களில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஆசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்