திருவள்ளூர்: மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்
வலையில் மர்மப்பொருட்கள் சிக்கியதை கண்டு மீனவர் அதிர்ச்சி அடைந்தார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கன்குப்பத்தை சேர்ந்த மீனவர் ஈஸ்வரன். இவர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். கடலில் வலையை வீசி சிறிது நேரம் கழித்து இழுத்தபோது கனமாக இருந்துள்ளது. பெரிய அளவிலான மீன் சிக்கியதாக கருதி மெதுவாக படகை கரைக்கு கொண்டு வந்து பார்த்தார்.
அப்போது வலையில் மர்மப்பொருட்கள் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த மர்ம பொருளில் பேட்டரி லைட் உட்பட பல்வேறு உதிரி பாகங்கள் இருந்தது. பின்னர் மீனவர் இதுகுறித்து பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர், திருப்பாலைவனம் போலீசார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். திருப்பாலைவனம் போலீசார் அந்த மர்ம பொருளை எடுத்து சென்று சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைத்தனர்.