ஜெயலலிதா கார் டிரைவர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.;
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான தகவல் தெரிந்து இருந்தும் அதை மறைத்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
கார் டிரைவர் ஆஜர்
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக கார் டிரைவர் கனகராஜின் அண்ணனான சேலத்தை சேர்ந்த தனபாலிடம் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது. அதில் அவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு விவரங்களை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பகிர்ந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஜெயலலிதாவின் மற்றொரு கார் டிரைவரான அய்யப்பன் என்பவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அவர் நேற்று காலை 10 மணியளவில் அவர் கோவை பி.ஆர்.எஸ் பயிற்சி மையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் நடந்த விசாரணையில், டிரைவர் அய்யப்பனிடம், இந்த வழக்கில் தனக்கு தெரிந்த தகவல்களை கூறுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதன்படி அய்யப்பன் போலீஸ் அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும் முன்பு அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
2-வது முறை விசாரணை
நான் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்தேன். கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்த முறை ஊட்டியில் வைத்து விசாரணை நடத்தினர். தற்போது கோவைக்கு வர சொல்லியுள்ளனர். ஜெயலலிதா இருக்கும் போது அடிக்கடி கோடநாடு செல்வோம். ஆனால் இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலை எனக்கு தெரியாது. கனகராஜ் இரண்டு ஆண்டுகள் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்ததால் அவரைதெரியும். அரசியலில் நான் தலையிடுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.