திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

திருநின்றவூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.

Update: 2022-09-26 11:46 GMT

கதவை உடைத்து கொள்ளை

திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்தமபுத்திரன் (வயது 73). இவருக்கு சாய்பாபா, சரத்பாபு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் டாக்டர்கள். இவர் கடந்த 23-ந் தேதி தனது மனைவியுடன் பெங்களூருவில் வசிக்கும் தனது இளைய மகன் சாய்பாபா வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை இவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் உத்தமபுத்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உத்தமபுத்திரன் பெங்களூருவில் இருந்து திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் தனது மூத்த மகன் சரத்பாபுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

என்ஜினீயர் வீட்டில் திருட்டு

அதேபோல் திருநின்றவூர் நடுக்குத்தகை முரளி நகரை சேர்ந்தவர் கிரண்குமார் (35) என்ஜினீயரான இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கிரண்குமார் கடந்த 22-ந் தேதி ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக சென்றார்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 24-ந் தேதி திருநின்றவூர் பகுதியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்