களக்காடு: ஆதி நாராயணசாமி கோவில் ஆனி தேரோட்ட திருவிழா

களக்காடு அருகே ஆதி நாராயணசாமி கோவில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-01 04:18 GMT

களக்காடு,

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். அதன் பின் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

திருவிழாவின் 8ம் நாளான வருகிற 8ம் தேதி இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் நாளான வருகிற 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்