குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்

குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

Update: 2023-10-22 07:33 GMT

குலசேகரன்பட்டினம்,

மதுரை சவுந்திரபாண்டி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது36). இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு கார்த்திகை வள்ளி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தசரா திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடை அமைப்பதற்காக அவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினத்தில் தங்கி உள்ளனர். அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும் சிதம்பரேஸ்வரர் கோவில் பகுதியில் தங்கி ஊசி, பாசி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடித்து சிதம்பரரேஸ்வரர் கோவில் கடற்கரை பகுதியில் படுத்து உறங்கி உள்ளனர். அப்போது பெற்றோருடன் குழந்தையும் படுத்து உறங்கி உள்ளது. நள்ளிரவில் திடீரென மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அம்சவள்ளி கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்தான் தனது குழந்தையை வாயை பொத்தி கடத்தி சென்றதாக அம்சவள்ளி இன்று காலை குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கார்த்திகை வள்ளியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்