கோடநாடு வழக்கு - நாளை மீண்டும் விசாரணை

முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2024-01-31 09:55 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோடநாடு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.

நீதிமன்ற ஜாமீனில் உள்ள சயானை நாளை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2 முறை சம்மன் வழங்கியும் ஆஜராகாத சயான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்