கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-13 07:29 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி. ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. முந்தைய விசாரணையின் போது 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார்.

சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் வாதாடினர். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போன் சிக்னல் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாதாடினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்