பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-09-30 18:45 GMT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொதுகால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் பயன்பெற சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். கறவை மாடுகள் 2 வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்