பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு; உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீரென்று உயிரிழந்தது தொடர்பாக உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தினார்.;

Update:2023-06-16 00:50 IST

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீரென்று உயிரிழந்தது தொடர்பாக உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தினார்.

விசாரணை கைதி திடீர் சாவு

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தங்கச்சாமி (வயது 26). இவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கூறி, அவரை புளியங்குடி போலீசார் கடந்த 11-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் சிறையில் இருந்த தங்கச்சாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், தங்கச்சாமி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தங்கச்சாமியின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உறவினர்கள் புளியங்குடி பஸ்நிலையம் முன்பு இரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இந்த நிலையில் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு திருமேனி நேற்று காலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கச்சாமியின் உடலை பார்வையிட்டு, அவரது உடலில் காயங்கள் ஏதேனும் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்த தங்கச்சாமியின் உறவினர்களிடமும் மாஜிஸ்திரேட்டு திருமேணி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து மதியம் தங்கச்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தங்கச்சாமியின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே தங்கச்சாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்