மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-05-15 01:29 GMT

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 22 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக 2 காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்