பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு:பா.ஜனதாவின் அரசியல் நாடகம்நாமக்கல்லில் பிருந்தா காரத் பேட்டி

Update: 2023-09-20 19:00 GMT

நாமக்கல்:

தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது பா.ஜனதாவின் அரசியல் நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

அரசியல் நாடகம்

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது பா.ஜனதாவின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜனதாவின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது. வருகிற 5 மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

கூட்டணியில் பாதிப்பு இல்லை

அதற்கு பின்னர் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு. இதனால் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். இது ஒரு நல்ல முன்னெடுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்