முத்தரசனுக்கு சுவாசப்பாதையில் கிருமி தொற்று

முத்தரசனுக்கு சுவாசப்பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-10-06 20:08 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மாதர் சங்க மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து கொள்ள கடந்த 3-ந்தேதி திருச்சிக்கு வந்தார். கடந்த 4-ந்தேதி மாலை அவருக்கு காய்ச்சல் அதிகமாகி, தொடர் விக்கல் ஏற்பட்டு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று இரவு திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்தநிலையில் முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் கட்சியினர் முத்தரசனின் உடல் நலம் குறித்து உடனுள்ள நிர்வாகிகளிடம் விசாரித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் என்றும் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.இதுதொடர்பாக கட்சியின் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தரசனுக்கு தற்போது காய்ச்சல் அளவு குறைந்துள்ளது. பலவீனமாக இருந்த நிலை மாறி, உடலில் ஆற்றல் கூடி வருகிறது. ஆனாலும் சுவாச பாதையில் உருவான கிருமி தொற்று நீங்கவில்லை. சிகிச்சை தொடர்கிறது. இன்னும் இரண்டொரு நாள் சிகிச்சை தொடர வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரது ரத்தம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 'டெங்கு' காய்ச்சல் இல்லை என்பதும், சாதாரண வைரல் காய்ச்சல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம், என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்