கடலில் மூழ்கி மாயமான மாணவர் பிணமாக மீட்பு

கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-01-24 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

ஐ.டி.ஐ. மாணவர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சி ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாய தொழிலாளி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது17). இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.-யில் ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 22-ந் தேதி மாலை இவர் தனது நண்பர்களுடன் கொள்ளிடம் அருகே கூழையாரில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றார். அப்போது திடீரென வேகமாக வந்த அலையால் சந்தோஷ் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு மாயமானார். இதனால் பதறிப்போன உடன் வந்த நண்பர்கள் உதவிக்காக கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தனர்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று சந்தோசை தீவிரமாக தேடினர்.

இந்த நிலையில் நேற்று சந்தோஷ் திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள கடல் முகப்பு துவாரத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்