நாமக்கல்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-19 12:29 GMT

நாமக்கல்,

நாமக்கல் - திருச்சி சாலை ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது48). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. நேற்று இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து உள்ளார்.

பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் குமரேசன் காரில் நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். நாமக்கல் - திருச்சி சாலை பழைய நீதிமன்ற கட்டிடம் அருகே கார் வந்தபோது காரில் வந்த நண்பர்களுக்கும், குமரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் காரில் வந்தவரில் ஒருவர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளார். இதையடுத்து காரில் வந்தவர்களும், குத்திய நபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அவரது குமரேசன் மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்