போடி அருகேசரக்கு வாகன டிரைவருக்கு கத்திக்குத்து:உறவினர்கள் சாலை மறியல்

போடி அருகே சரக்கு வாகன டிரைவரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-08 18:45 GMT

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து கோனப்பன் (வயது 22). சரக்கு வாகன டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கு இடையே கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை முத்து கோனப்பன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து முத்து கோனப்பனை கத்தியால் குத்திய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் போடி-தேவாரம் சாலையில் உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக கூறினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையில் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்